Saturday 9 August 2014

பல்வகை பயன்தரும் எலுமிச்சைப் புல் (லெமன் கிராஸ்) சாகுபடி

நறுமணப் பயிராகவும், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள், திரவப் பொருள்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளாகவும் விளங்கும் "லெமன் கிராஸ்' என்னும் எலுமிச்சைப் புல் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

லெமன்கிராஸ்: புல், செடி, கொடிகள் இருந்தால் கொசுக்கள் வரும். ஆனால், எலுமிச்சைப் புல்லோ கொசுவை விரட்டும். இதன் மணம் எலுமிச்சையைப் போன்றே இருப்பதால், இந்தப் புல்லை வளர்த்தால், கொசுக்கள் வராது.

இந்தப் புல்லிலிருந்து எடுக்கப்படும் லெமன் கிராஸ் எண்ணெய், துணி துவைக்கும் பவுடர், பாத்திரம் துலக்கும் பவுடர், புளோர் கிளீனர், பினாயில் போன்றவற்றுடன் சேர்க்கப்படுகிறது. லெமன் டீ தயாரிப்பில் எலுமிச்சைச் சாறுடன் நறுமணத்துக்காக லெமன் கிராஸ் ஆயிலும் சில இடங்களில் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சைப் புல் கேரளத்தில்தான் அதிகமாக விளைவிக்கப்படுவதால் லெமன் கிராஸ் ஆயிலை "கொச்சி வாசனை எண்ணெய்' எனவும் அழைப்பர்.

லெமன் கிராஸ் ஆயில் கொடைக்கானலில் அதிகமாக விற்கப்படுகிறது. இது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். கெமிக்கல் கடைகளில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட லெமன்கிராஸ் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்தப் புல் அதிகம் பயிரிடப்படுகிறது.

ரகங்கள்: ஒடி 19, 408, ஆர்ஆர்எல் - 39, பிரகத், பிரமான, சிபிகே - 25, கிருஷ்ணா மற்றும் காவேரி.

மண், தட்பவெப்பநிலை: வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு: ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ ஹெக்டேர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜூன் - ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம்.

நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழுது, ஒரு ஹெக்டேருக்கு 20-25 டன் மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்த வேண்டும். தேவையற்ற அளவில் பாத்திகள் பார்கள் அமைத்து நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு ஹெக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து உரத்தில் முதல் பாதியை நடவின்போதும் மீதி உரத்தை நடவு செய்த ஒரு மாதம் கழித்தும் இடவேண்டும். இரண்டாம் ஆண்டில் அறுவடையின் பின்பும் மற்றும் ஒரு மாதம் கழித்தும் தழைச்சத்து உரம் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்: நடவு செய்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். எலுமிச்சைப் புல்லுக்கு 7 முதல் 15 நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு: இப்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் காணப்படுவதில்லை. எனினும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டர்ன் 25 ஈசி (அ) டைமெத்தோயேட் 30 ஈசி 1 மில்லியனை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைத் தின்னும் புழுக்களைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 ஈசி (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 ஈசி 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை: நடவு செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது அறுவடையும் செய்ய வேண்டும். அறுவடையின்போது புல், புதர்களை தரைமட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணெய் எடுக்க தண்ணீர் அல்லது ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்க வேண்டும். எண்ணெய் கிடைக்கும் அளவு 0.2 - 0.3 சதவீதம்.
மகசூல்: ஹெக்டேருக்கு 20 முதல் 30 டன் வரை புல் கிடைக்கும். எண்ணெய் ஹெக்டேருக்கு முதலாமாண்டு 25 கிலோ, இரண்டாமாண்டு 85 முதல் 100 கிலோ கிடைக்கும்.


இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றி எலுமிச்சைப் புல் சாகுபடி செய்து நல்ல மகசூலும் கூடுதல் வருமானமும் பெறலாம். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை நேரில் அணுகலாம்.

No comments:

Post a Comment