Wednesday 30 July 2014

பூச்சி விரட்டிகள் தயாரித்தல் : வேம்பு பொருள்

வேப்ப விதைக்கரைசல்: ஒரு ஏக்கருக்கு 3-5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம்பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை என்றால் 5 கிலோவும் தேவை) வேப்பம்பருப்பை பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை ஒரு காடாத்துணியில் மூடையாக கட்டி சுமார் 10லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன்பின் இந்தக் கரைசலை வடிகட்டினால் 6-7 லிட்டர் கரைசல் கிடைக்கும்.

பயிருக்குத் தெளிக்க வேண்டும்பொழுது ஒரு டேங்கிற்கு (10 லிட்டர்) 500-100 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500-1000 மி.லி, கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து 100 மி.லி. காதி சோப்புக்கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டர்-10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக்கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது.

ஒரு ஏக்கர் பயிருக்கு 6 டேங்க் வரை தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பானை பயன்படுத்தினால் 11 டேங்க் பயன்படுத்த வேண்டும். கரைசலின் அடர்த்தியை பூச்சித் தாக்குதலின் தன்மைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.


வேப்ப இலைக்கரைசல்: ஒரு ஏக்கர் பயிருக்குத் தெளிக்க 10-12 கிலோ இலை தேவைப்படும். இந்த இலையை ஒன்றுமிரண்டுமாக இடித்து ஒரு காடாத்துணியில் மூடையாக கட்ட வேண்டும். இதை 20-24 லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

அதற்குப்பிறகு இந்தக்கரைசலை வடிகட்ட வேண்டும். அப்படி வடிகட்டும்பொழுது 15-17 லிட்டர் கரைசல் கிடைக்கும்.ஒரு டேங்கிற்கு (10 லிட்டர் அளவு) 500-1000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500-1000 மி.லி, கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரு டேங்க் கரைசலுடன் 100 மி.லி. காதி சோப்புக்கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டருக்கு 10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக்கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கர் பயிருக்கு 10 டேங்க் வரை தெளிக்க வேண்டும். இந்தக் கரைசல் சுமார் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். வேப்பம் புண்ணாக்கு: வேப்பம் புண்ணாக்கை கோணிப்பைகளில் போட்டு தண்ணீர் செல்லும் மடைவாயில்களில் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வயலுக்குள் செல்லும் தண்ணீருடன் வேப்பம் புண்ணாக்கு கரைந்து சீராகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பயிரின் வேரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள், தூர்ப்பகுதியில் வரும் பூச்சிகள் ஆகியவற்றை வராமல் தடுக்கலாம். பயிரும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் பெறும்.

No comments:

Post a Comment